ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து மோதல்
கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உள்ளன.
பாதுகாப்பு காரணங்களை கருதி இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தொடரின் தொடக்க ஆட்டத்தில் இன்று (19-ம் தேதி) பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் கராச்சியில் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/raopkTX