ஐவர் ஹாக்கி உலக கோப்பை: கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

மஸ்கட்: 16 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐவர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஜமைக்காவுடன் மோதியது. இதில் இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மணீந்தர் சிங் 4 கோல்களும் மன்ஜீத், ரஹீல் முகமது, மன்தீப் மோர் ஆகியோர் தலா 2 கோல்களும் உத்தம் சிங், ராஜ்பார் பவன், குர்ஜோத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்திய நிலையில் அடுத்த ஆட்டத்தில் எகிப்து அணியிடம் தோல்வி கண்டிருந்தது. தற்போது ஜமைக்காவை வென்றதன் மூலம் தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி. இன்று (30-ம் தேதி) நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/t0OnDxb