ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் ஆதர்ஷ் சிங்

பாகு: 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் அஜர்பைஜான் நாட்டிலுள்ள பாகு நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியானது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் துப்பாக்கிச் சுடுதல் வீரர்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இந்தப் போட்டியில் ஆடவர் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன. தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஆதர்ஷ் சிங் பங்கேற்று 583 புள்ளிகளைக் குவித்தார். இதன் மூலம் அவர் தகுதிச் சுற்றில் 6-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஆதர்ஷ் சிங் இழந்துள்ளார். உக்ரைன் வீரர் டெனிஸ் குஷ்நிரோவ் 583 புள்ளிகள் எடுத்தபோதும் அவர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். எஸ்டோனியாவின் பீட்டர் ஒலஸ்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/lQRxj4C