
பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. பெர்த்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் 51 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 84 ரன்களும் ஜாஸ் பட்லர் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் எலிஸ்3 விக்கெட்கள் வீழ்த்தினார். 209 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 1, மிட்செல் மார்ஷ் 36, ஆரோன் பின்ச் 12, மார்கஸ் ஸ்டாயினிஸ் 35, டிம் டேவிட் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள்தேவையாக இருந்த நிலையில்17 ஓவரை வீசிய மார்க் வுட் 4ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் டேவிட் வார்னரை அவுட்டாக்கினார். இது திருப்புமுனையாக அமைந்தது. வார்னர் 44 பந்தில் 73 ரன்கள் சேர்த்தார்.
சேம் கரணின் அடுத்த ஓவரில் 14 ரன்கள் விளாசப்பட்டது. 19-வது ஓவரை வீசிய ரீஸ் டாப்லே 6 ரன்களை மட்டும் வழங்கி டேனியல் சேம்ஸை (6) வெளியேற்றினார். சேம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தில் பவுண்டரி விரட்டிய மேத்யூவேட், 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை தளர்ந்தது. மேத்யூ வேட் 21 ரன்கள்எடுத்தார். அவரைத் தொடர்ந்துநேதன் எலிஸ் (0) வெளியேறினார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்களையும் ரீஸ் டாப்லே, சேம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/4d3rT9E