மும்பை: கோவா அணிக்காக ஆடிவரும் அர்ஜுன் டெண்டுல்கர் தன் அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதம் கண்டு தந்தையைப் போல் மகன் என்று கொடிநாட்டியுள்ளார். ஆனால் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மகன் என்பதாலேயே எப்போதும் தன் மகன் மீது அதீத கவனம் செலுத்தப்பட்டு வருவதால் அர்ஜுனின் குழந்தைப் பருவம் ஒரு சாதாரணமான குழந்தைப் பருவமாக இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். ஆகவே, மகனுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சச்சின்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ரஞ்சி போட்டியிலேயே அர்ஜுன் டெண்டுல்கர் 207 பந்துகளைச் சந்தித்து 107 ரன்களை எடுத்து தலைப்புச் செய்தியானார். இந்த இன்னிங்சில் 16 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார் அர்ஜுன். தந்தையான ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தன் முதல் ரஞ்சி போட்டியிலேயே தன் 15 வயதிலேயே குஜராத் அணிக்கு எதிராக வான்கடேயில் சதம் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஊடகங்கள் அர்ஜுன் டெண்டுல்கர் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம், ஒரு புகழ்பெற்ற வீரரின் மகன் என்பதாலேயே அர்ஜுனுக்கு இயல்பான குழந்தைப் பிராயம் இல்லாமல் போனது என்று சச்சின் ஊடகங்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/VdK6Ivt